Friday, October 31, 2014

சப்பாத்து

'மகள் எழும்புங்க. இஸ்கூலுக்கு லேட் ஆயிட்டு'

'எனக்கு இஸ்கூல் போக ஏலாம்மா. தம்பி இரண்டுபேரயும் அனுப்புங்க' என்று கூறிவிட்டு போர்வையை தலையோடு இழுத்து போர்த்திக்கொண்டாள் பரீனா.

மற்ற நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, தாய்க்கு ஒத்தாசையாக ஏதாவது செய்துகொடுப்பாள். நேரம் வந்ததும் தம்பிகள் இருவரையும் எழுப்பி அவர்களையும் பாடசாலை செல்வதற்கு தயார் படுத்திவிடுவாள்.

எப்போதும் உற்சாகமாக எழுந்து பாடசாலைக்குச் செல்லும் தன் மகள் பரீனா இன்று ஏன் போக முடியாதென்கிறாள்? அப்படி என்றால் அவளுக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கும் என்று எண்ணிய அவளது தாய்,

'பரீனா உடம்புக்கு ஏதும் முடியலயா?' என்று கேட்டவாறு மகளின் நெற்றியிலும், கழுத்திலும் கைவைத்துப் பார்த்தாள்.

பரீனாவுக்கு காய்ச்சல் எல்லாம் ஒன்றுமில்லை. கழுத்து, நெற்றி எதுவும் கொதிக்கவில்லை. அவளுக்கு மனசுக்குள்தான் எல்லாவித கொதிப்புகளும் இருந்தது.  பாடசாலை செல்லவே பிடிக்கவில்லை. வீட்டில் உம்மாவுடன் இருப்பதற்கே மிகவும் விரும்பினாள்.

ஆனால் பரீனா படிக்க முடியாமல் கடைசி மேசையில் இருப்பவள் அல்ல. அவள்தான் வகுப்பிலேயே முதலாவது அல்லது இரண்டாவது நிலைகளை தக்க வைத்துக்கொள்வாள். பொதுவாக ஒரு ஏழை மாணவியை சக நண்பிகளோ, ஆசிரியர்மாரோ தட்டிக்கொடுப்பது அன்று தொடக்கம் இன்று வரை வழமையில் இல்லைத்தானே. ஆதலினால் அவளுக்கு பாராட்டுகளோ, உற்சாகப்படுத்தல்களோ ஏதும் இருந்ததில்லை. தன் தாயின் ஊக்குவிப்பாலும், தந்தையின் உழைப்பாலும் அவள், தானே தன் நிலையை உயர்த்திக்கொள்ளப் பழகியிருந்தாள். ஐவேளை தொழுகையில்கூட தனது அறிவை விருத்தி செய்ய உதவுமாறு அல்லாஹ்விடம் மனம் உறுகி இறைஞ்சுவாள்.

தன்னைப் போன்றவர்களுக்கு கல்வி மாத்திரமே கைகொடுக்கும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவள் கல்வியைத்தான் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தாள். அவள் எட்டாம் தரத்தில்தான் கல்வி கற்கிறாள். என்றபோதும் உயர்தர வகுப்பு மாணவிகள் கூட பொது அறிவுக் கேள்விகளுக்கான விடைகளைக் கேட்க பரீனாவிடமே வருவார்கள். அந்தளவு ஞாபக சக்தியும், திறமையும் கொண்டவள் அவள்.

ஆனாலும் கூட பாடசாலையில் தமிழ்த்தின போட்டி, அறிவுக் களஞ்சியம், மீலாத் தின போட்டி, மாணவர் மன்றம் போன்றவை நடக்கும்போது தானாக முன்சென்று நிகழ்ச்சிகளுக்காக தன் பெயரைக் கொடுப்பது பரீனாவுக்கு சங்கடமாக இருந்தது. தனக்குள் திறமை இருக்கிறது என்பதை அறிந்த அவள் அப்படி செய்யாததற்கு காரணமும் இருந்தது. அதாவது அவ்வாறான போட்டி நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியரின் பிள்ளைகளே தெரிவு செய்யப்படுவார்கள் அல்லது முன்னமே அதற்குரியவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். அந்தந்த நிகழ்ச்சிகள் நிகழும்போது தான் தெரியும் இந்த ரகசியங்கள் எல்லாம்.
மாணவர் மன்றம் இருப்பதாய் அறியும்போது அவள் தன் வகுப்பாசிரியரிடம் சென்று,

'டீச்சர் இந்த மாணவர் மன்றத்துல நானும் பாட்டு நிகழ்ச்சில கலந்துக் கொள்றனே' என்று கேட்டபோது,

'ஆ.. பரீனா.. மாஹிரா டீச்சர்ட மகள் தான் இந்த முறை பாட்டு நிகழ்ச்சிக்கு சேர்ந்திருக்கா' என்றார்.

சேர்ந்திருக்கிறாவா அல்லது சேர்த்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்தாலும் அவளால் அந்த கேள்வியை கேட்க முடியாதல்லவா? அதனால்,

'அப்போ பேச்சு நிகழ்ச்சில சேர்த்துக்குங்க. நா சீக்கிரம் பாடமாக்கிடுவேன்.'என்றாள்.

'பரீனா உவைஸ் சேர்ட மகன் இந்த வகுப்புல பேச்சு திறமை மிக்கவன் என்று தெரியும்தானே. போங்க போய் இடத்தில உக்காருங்க' என்றார் டீச்சர்.

இனிமேல் கேள்வி கேட்டகாதே என்பதை நாசூக்காக டீச்சர் சொல்லிவிட்டார். பரீனாவின் ஆசைக் கனவுகள் மண்ணாகிவிட்டது.

அவள் பாடசாலை வாசிகசாலையை நன்றாக உபயோகித்துக்கொள்வாள். வெள்ளிக்கிழமைக்கு சுமார் ஐந்நூறு பக்கங்கள் கொண்ட நாவல் ஒன்றை வாங்கிச் சென்றால் சனி, ஞாயிறுகளில் அதனை வாசித்து முடித்துவிடுவாள். அந்தளவுக்கு அவளுக்கு தேடல் இருந்தது.

ஒருநாள் பரீனாவின் தந்தைக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டது. அதனால் அவர் வேலைக்குச் செல்லவில்லை. வருமானம் குறைந்த நேரம் பார்த்து ஹஜ் பெருநாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. பெருநாள் என்றால் பரவாயில்லை. புது உடுப்பு இல்லாவிட்டால் பழையதை அணிந்துகொள்ளலாம். ஆனால் பரீனாவின் நான்கைந்து பாடக் கொப்பிகளின் தாள் தீர்ந்துவிட்டது. என்ன செய்ய வாப்பாவிடம் காசிருந்தால் வாங்கித் தந்திடுவார். ஆனாலும்கூட அவள் தன் தேவைகளை கூறியபோது அவர் கடனுக்குத்தான் கொப்பிகள் வாங்கிவந்தார். எல்லாமே எண்பது பக்க கொப்பிகள். அவையே அவள் வறுமையை ஊருக்கு காட்டிக்கொடுத்துவிடும் போலிருந்தது.

அடுத்த நாள் வகுப்பில் தன்னைப் போலவே மெலிந்த கொப்பிகளுடன் பரீனா இருந்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்த பிள்ளை 250 பக்கத்துக்கும் மேற்பட்ட தாள்கள் கொண்ட அட்லஸ் கொப்பிகள் வைத்திருந்தாள். அவள் பரீனாவின் எண்பது பக்க கொப்பிகளையும், பரீனாவையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை. சற்று நேரத்தில் அப்பியாசங்களை கொடுத்துவிட்டு திருத்துவதற்காக வந்த மாஹிரா டீச்சர் பரீனாவைப் பார்த்த பார்வை இருக்கிறதே.. அதில் காணப்பட்ட ஏளனம் இருக்கிறதே.. அதைத் தாங்கிக் கொள்ள பரீனாவுக்கு மிகவும் கஷ்டமாகவும், வேதனையாகவும் இருந்தது.

இப்படியிருக்க ஹஜ் பெருநாளும் வந்தது. புதிய ஆடைகளை பரீனாவின் வீட்டில் யாரும் வாங்கவில்லை. வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியிருந்தால் தானே? ஹஜ் பெருநாளைக்கு பள்ளிக்குச் சென்று வரும்போது சிறுவர்; எல்லோருக்கும் பெருநாள் காசு கிடைத்தது.
பரீனாவுக்கும் பெருநாள் காசு கிடைத்து. அவற்றை பரீனா மிகவும் சந்தோசத்துடன் எண்ணிப் பார்த்தாள். கறுப்பு நிற சப்பாத்து ஒரு சோடி வாங்க வேண்டும் என்ற அவளது நெடுநாள் இலட்சியத்தை அடைய காசு போதாமல் இருந்தது. ஏற்கனவே அவள் பாவித்து வந்த சப்பாத்து பிய்ந்திருந்தது. எனவே அவள் தனது தாயிடம் இது பற்றி கதைத்தாள்.

அங்கே வந்திருந்த ஷரீப் தன் சகோதரியின் மகள் பரீனா சப்பாத்தை வாங்குவது பற்றியே கதைக்கிறாள் என்பதை உணர்ந்து பரீனாவை அழைத்தார். பிறகு தனது சைக்கிளில் அவளை அமர வைத்து சப்பாத்து கடைக்கு அழைத்துச் சென்றார்.

பரீனாவிடமிருந்த காசை எண்ணிப் பார்த்துவிட்டு மேலதிகமான தொகையை சேர்த்து புத்தம்புது கறுப்பு நிற சப்பாத்தை வாங்கிக் கொடுத்தார். அவளுக்கு மிகவும் சந்தோசமாயிருந்தது. இன்னும் மூன்று வாரங்களில் புதுவருடம் வந்துவிடும். புதுவருடத்தில் புதிய வகுப்புக்கு புதிய சப்பாத்தை போட்டுக்கொண்டு செல்லலாம்.. நண்பர்களிடம் காட்டி மகிழலாம்.. ஓடி விளையாடலாம்.. என்று பல கற்பனைகளில் ஆழ்ந்திருந்தாள்.

அவள் ஆசைப்பட்டபடியே அந்த நாளும் வந்தது. ஒரு சிட்டுக்ருவி போல அந்த கறுப்பு நிற சப்பாத்தைப் போட்டுக்கொண்டு நேரகாலத்துடனேயே பாடசாலைக்குச் சென்றாள். தன் நண்பிகளிடம் காட்டி மகிழ்ந்தாள். நண்பிகளும் மிகவும் சந்தோஷமாக அதைப் பார்த்து அதன் விலை பற்றியெல்லாம் கேட்டார்கள். தனக்கு பெருநாள் காசு கிடைத்ததில் இருந்து மாமா மீதி காசைப் போட்டு வாங்கித் தந்தது வரை கதையாக மகிழ்ச்சி பொங்க சொல்லி முடித்தாள்.

புது வருடத்தின் முதல் நாள் பாடசாலை தொடங்குவதற்கான மணி அடிக்கப்பட்டது. காலைக்கூட்டத்தில் எல்லோரும் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். பரீனா போன்ற ஓரிருவரைத் தவிர அனைவரும் புதிய உடைகள் உடுத்தி வெள்ளைப் புறாக்களைப் போன்று காணப்பட்டார்கள். காலைக்கூட்டம் நடந்து முடித்த பின்பு பாடசாலை பிள்ளைகளுக்கு ஒரு அறிவித்தல் சொல்லப்பட்டது. அதாவது இந்த வருடத்தில் இருந்து எல்லோரும் ஷவெள்ளை சப்பாத்து அணிந்து வர வேண்டும்| என்பதே அந்த அறிவித்தல். பரீனாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஆசை ஆசையாக காசு சேர்த்து மிகவும் கஷ்டப்பட்டு கறுப்பு நிற சப்பாத்து வாங்கியாகிவிட்டது. இப்போது திடீரென்று வெள்ளைச் சப்பாத்து வாங்கி வரச் சொன்னால் என்ன செய்வது? எப்படி அதை சாத்தியப்படுத்துவது? என்று குழம்பினாள்.

அடுத்த நாளும் பயந்தபடியே தன் புதிய கறுப்புச் சப்பாத்தை போட்டு வந்தாள். மாணவத் தலைவிகள் அவளுக்கு உபதேசம் செய்தார்கள். அதற்கு மறுநாளும் உபதேசம் செய்தார்கள். மூன்றாவது நாள் அதிபரிடம் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள். பரீனாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
வகுப்பாசிரியரும், வகுப்புத் தலைவியும் அவளது கறுப்பு நிறச் சப்பாத்தை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாயிருந்தார்கள். ஏதோ செய்யக்கூடாத பெரிய தப்பை செய்தது போல அவளைப் பார்த்தார்கள். இறுதியில் பாடசாலை அதிபரும் பரீனாவுக்கு வெள்ளைச் சப்பாத்து போட்டுவரும்படி கடுமையாக எச்சரித்தார்.

பரீனாவுக்கு தாழ்வுச் சிக்கலாக இருந்தது. தான் ஒரு கோமாளியாக எல்லோரது பார்வைக்கும் விளங்குவதாக தனக்குள்ளே எண்ணிக்கொண்டாள். அவளுக்கு பாடசாலை வெறுத்துப்போனது. அதிபர், வகுப்பாசிரியர், மாணவத் தலைவிகள், வகுப்புத் தலைவி என எல்லோரையும் வெறுத்துப் போனது. அதனால்தான் பாடசாலை செல்ல முடியாது என்று படுத்துக் கிடக்கிறாள் பரீனா.

அவளது புதிய கறுப்பு நிறச் சப்பாத்து அநாதையாக கதவு மூலையில் வீசப்பட்டிருந்தது!!!

Sunday, August 31, 2014

உறவுகள்

அன்று பத்திரிகை அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த நண்பர் என்னைப் பார்த்து,

'காவ்யா புதுசா ஒரு எழுத்தாளர் நல்லா கவிதை எழுதி வாராங்க. சூப்பரா இருக்கு' என்று கூறியதும் கொப்பித் தாளில் எழுதி அனுப்பப்பட்ட அந்த கவிதையை நான் கையில் எடுத்து வாசித்தேன். பாலகுமாரி என்று எழுதியவரின் பெயர் இருந்தது. உண்மையில் முதிர்ந்த ஒரு எழுத்தாளரின் கவிதை என்று எண்ணிக்கொண்டு இவர்களெல்லாம் ஏன் இவ்வளவு காலம் எழுதாமல் விட்டார்கள் என்ற ஐயத்தை அவரிடம் கேட்டேன். அவரும் அதை ஆமோதித்தார். அந்த கவிதைத் தாளில் எழுதப்பட்டிருந்த விலாசத்தை மனதில் இருத்திக்கொண்டு போன காரியத்தை முடித்துக்கொண்டு வந்துவிட்டேன்.

நான் கொழும்பில் தொழில் செய்வதினால் ஒரு வாடகை அறையையே தெரிவு செய்து அதிலே தங்கியிருந்தேன். என்னுடன் ரேகா, கீதா என்ற இரு நண்பிகளும் தங்கியிருந்தனர். நான் இலக்கியத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால் இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வது, பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசுவது, இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடுவது என்று எனது காலம் மிகவும் மகிழ்ச்சியாகவும், பிரயோசமாகவும் கழிந்து கொண்டிருந்தது. ரேகா அதைப்பற்றி அடிக்கடி கிண்டலடிப்பதுண்டு

'கவி.. லீவு நாளெண்டாலும் நீ தமிழ்ச் சங்கம் அங்க இங்கன்டு ஓடுறாய். பேசாமல் எங்களுடன்; இரு' என்பாள். ஏதாவது எழுத்துலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்ததால் என்னால் போகாமல் இருக்க முடியவில்லை. இப்படியிருக்க மனதில் துருத்திக்கொண்டிருந்த அந்த விலாசத்துக்கு ஒரு சிறிய மடல் எழுதினேன்.

நான் காவ்யா. ஒரு எழுத்தாளர். இலக்கிய விடயங்கள் பற்றி பேச வேண்டியிருக்கிறது. முடிந்தால் எனது தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.

என்று சுருக்கமாக எழுதி அனுப்பி வைத்தேன். ஒரு சில நாட்களுக்குப் பிறகு எனக்கு அறிமுகமில்லாத இலக்கித்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எடுத்து கதைத்ததும் பத்தொன்பது, இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டது. யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு பேசினேன்.

'நான் பாலகுமாரி கதைக்கிறேன்' என்றாள்.

என்னது பாலகுமாரியா? இவ்வளவு இளமையான குரல் கொண்டவளாக இருக்கின்றாளே என்று வியந்தேன். பிறகு தான் தெரிந்தது பாலகுமாரி பத்தொன்பது வயதுடையவளே என்று. இவளா பத்திரிகையில் அந்தக் கவிதைகளை எழுதினாள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் அன்பாகவும், பவ்வியமாகவும் கதைத்து அவளுக்கு பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு போனை சைவத்துவிட்டேன். அலுவலக வேலைகள் அதிகமாக இருந்ததினால் அப்படி பாதியில் வைத்துவிட்டாலும் இரவில் எடுத்துப் பேசலாம் என்று எண்ணிக்கெண்டு வேலையில் மூழ்கினேன்.

உண்மையில் அன்று எனக்கு பாலகுமாரியை நினைவு வரவேயில்லை. அடுத்த நாளும் வேiலைப் பளுக்களுக்கு இடையில் சிக்கியிருந்ததால் பாலகுமாரியுடன் பேசியது குறித்து அடிக்கடி ஞாபகம் வந்தாலும் பேசுவதற்கான சூழ்நிலை எனக்கு இருக்கவில்லை.

அன்று மாலை பஸ்ஸில் போகும்போது பாலகுமாரிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தேன். உடனே குதூகலமாக மறுமுனையிலிருந்து பாலகுமாரி  ஹலோ என்றாள்.

'அக்கா நா உங்களுக்கு கோல் பண்ண நினச்சன். ஆனா நீங்க பிஸி எண்டதால பேசல்ல' என்றாள்.

அவளது கூற்றில் பொய் இருக்கவில்லை. அதனால் நானும் எதுவித வேறுபாடும் இன்றி பேசினேன். இப்படியே போனில் வளர்ந்த நம் இலக்கிய நட்பு, கடித்திலும் தொடர்ந்தது. அந்தக் காலத்தில் போனுக்கு செலவழிப்பதற்காக என்றே வேறு உழைக்க வேண்டியிருந்ததால் நிறைய கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள கடிதம் உதவியது.
ஒருநாள் திடீரென பாலகுமாரி தொலைபேசியில்,

'அக்கா நாளைக்கு நாங்க கொழும்புக்கு வர இருக்கிறோம். உங்களை சந்திக்கலாமா?' என்று கேட்டாள். நானும் நேரத்தை ஒதுக்கி சந்திக்கச் செல்லலாம் என்றமுடிவுடன், 'சரி. உங்கள் அலுவல்கள் முடிந்ததும் கோல் பண்ணுங்க. நான் இடத்தைச் சொல்றேன்' என்றேன். நாளை பாலகுமாரியை முதன் முதலாக சந்திக்கப் போகிறேன் என்ற சந்தோஷம் உள்ளுக்குள் நிலவியது உண்மைதான். சொன்னது போலவே மாலை முன்றரை மணிக்கு பாலகுமாரி தொலைபேசினாள். நான் சரியாக நான்கு மணிக்கு கங்காராம என்ற இடத்துக்கு வருவதாகக் கூறினேன். அவ்விடத்தில்தான் அவளது மாமியின் வீடும் அமைந்திருப்பதால் இருவருக்கும் அந்த இடத்தில் சந்திப்பது உசிதமாகப்பட்டது.

நான்கு மணிக்கு நான் சரியாக அங்கு செல்வதாக எண்ணிக்கொண்டு சென்றேன். ஆனால் அதற்கு முதலே அவள் தனது தாயுடனும், தந்தையுடனும் அங்கு வந்து எனக்காகக் காத்திருந்தாள். ஏற்கனவே அறிமுகம் இல்லாத காரணத்தால் அவ்விடமே இருந்து தொலைபேசி அழைப்பை எடுத்துக்கொண்டே அந்தப் பெண்ணை நோட்டமிட்டேன். அவள் அவளது தொலைபேசியை எடுத்து கதைத்ததும் அறிமுகமாகி இருவரும் சிநேகபூர்வமாக புன்னகைத்தபடியே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

'அம்மா அதோ அவங்கதான் காவ்யா அக்கா' என்று என்னைக் காட்டியபடி என் அருகே வந்தாள். அவளையும், அவளது பெற்றோரையும் அன்றுதான் நான் முதன் முதலாக சந்தித்தேன். அவர்களது ஊரில் விசேடமாக தயாரிக்கப்படும் தீன் பண்டங்களை எனக்காக சுமந்து வந்திருந்தாள். என்னிடம் அவற்றைக் கையளிக்கும்போது பாலகுமாரியின் கண்களைப் பார்த்தேன். மகிழ்ச்சி ததும்பியிருந்தது. நான் பார்த்ததை அவள் காணவில்லை என்பதில் எனக்கு ஏக திருப்தி. தான் நாளைக்கு மீண்டும் ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இதுவரை தான் எழுதிய கவிதைகள் அனைத்தையும் நான் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க போட்டோகொப்பி செய்துகொண்டு வந்து எனக்குத் தந்தாள்.

'அக்கா உங்களுக்கு வசதி கிடைக்கிறப்போ இதை வாசித்து பிழை திருத்துங்க. முடிஞ்சால் பத்திரிகைகளுக்கும் கொடுத்திடுங்க' என்று பாலகுமாரி பணிவாகக் கூறினாள்.

உயர்தரப் பரீட்சை முடித்துவிட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அவள் கொழும்பில் தொழில் செய்ய ஆர்வமாக இருப்பதை அவளது பேச்சு காட்டிக்கொடுத்தது. நான் அவசரப்பட்டு எதுவும் சொல்லாமல் பிரியமாகப் பிரிய விடைகொடுத்தேன்.
இரு தினங்களுக்குப் பிறகு மீண்டும் தொலைபேசினாள். கவிதைகள் எப்படி இருக்கின்றன? என்று கேட்டாள். ஆறுதலாக வாசித்துவிட்டுச் சொல்கின்றேன் என்று கூறி பொதுவாகப் பேசிவிட்டு வைத்தேன்.

சனிக்கிழமை மாலை வேளையில் ஒருநாள் பாலகுமாரி தந்த கவிதைகளை வாசித்தேன். பிரமித்துப் போனேன். ஒரு சின்னப் பெண்ணுக்கா இத்தனை வீச்சான கருத்துக்கள்! அழமான சிந்தனைகள்! அவளது சிந்தனைக்குள் கருக்கொண்டிருந்த கவிதைகளில் என் மனம் ஒட்டிக்கொண்டது. கூடவே பாலகுமாரி குறித்த மரியாதை அன்பாக மாறியது. அவளது கவிதைகளில் விரக்தியும், தாக்கமும், தாழ்வுச் சிக்கலும் காணப்பட்டமை எனக்கு மனதில் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. இவை இந்த வயதில் வரவேண்டியவைதான் என்று எனக்குள்ளே ஒரு போலி சமாதானத்தைக கூறிக்கொண்டு இதுகுறித்து அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஒருநாள் அவளிடம் கேட்டபோது, ஷஅதெல்லாம் கற்பனை| என்றாள். பிறகு ஷகொஞ்சம் நிஜம்| என்றாள். இறுதியில் அவள் பற்றிய சில உண்மை விடயங்களை அறியக் கிடைத்தது. ஆம் பாலகுமாரி மிகவும் நேசித்த அவளது அம்மம்மாவினதும், தாத்தாவினதும் மரணம், ஒரு நண்பி அவளுக்கு செய்த துரோகம், பாலகுமாரி தன் சொந்த சகோதரனாய் எண்ணிய பெரியம்மாவின் மகன் ஆரம்பத்தில் பாசத்தைப் பொழிந்துவிட்டு இடையில் காசு வந்ததும் எல்லோரையும் தூக்கியெறிந்து விட்டார். இப்படி அடிப்படையான சில காரணங்கள் அவளை மிகவும் பாதித்திருந்து. அவற்றிலிருந்து முழுமையாக விடுபட அவளால் இயலாமல் துணைக்கென இலக்கியத்தை நாடியிருக்கின்றாள். அந்த இலக்கியத்தின் மூலமாகவே மனதில் உள்ள துயரங்களை ஆற்றிக்கொள்வதாகக் கூறினாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சினை பெரிது. வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் இருக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று கேட்கத் துணிந்தாலும், ஏற்கனவே நொந்து போனவளுக்கு வாழ்வு குறித்த பயத்தை இன்னும் ஏற்படுத்தலாமா? என்று எண்ணி அவளுக்கு மிகவும் ஆறுதல் சொன்னேன்.

அதில் திருப்தி கண்டவளாய் அவள் என்னை ஒரு நல்ல தோழியாக ஏற்கத் தொடங்கினாள். நிறைய விடயங்கள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். எப்ரல் விடுமுறையில் தங்கள் ஊருக்கு வருமாறு அன்பாக அழைப்பு விடுத்தாள். அதை என்னால் மறுக்க முடியவில்லை. எனவே நான் அங்கு சென்று பத்து நாட்கள் தங்கியிருந்தேன். ஒரு அன்பான குடும்பத்தைச் சந்தித்த மகிழ்ச்சி நெஞ்சில் நிலைத்தது. பாலகுமாரியின் தாழ்வுச்சிக்கல்கள், விரக்தி ஆகியவற்றை எல்லாம் தூக்கியெறியுமாறு பல புத்திமதிகள் சொன்னேன். பத்துத் தினங்களின் பின்பு ஏற்பட்ட பிரிவு என் உள்ளத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது உண்மை. அக்கா அக்கா என்று மிகவும் பாசமாக இருந்த பாலகுமாரிக்கு சொந்த சகோதரி போல் இருந்து வழிகாட்டுவேன் என்ற உறுதிப்பாட்டை மனதில் எண்ணிக்கொண்டேன்.

சிறிது நாளில் இறைவனின் உதவியால் கொழும்பில் பாலகுமாரிக்கு ஒரு தொழிலைப் பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதை அவளிடம் சொன்னபோது அகமகிழ்ந்து போனாள். அவளது வீட்டாருக்கும் என்னிடம் அவளை அனுப்புவதில் எதுவித ஆட்சேபணை இருக்கவில்லை.
நான் வரச்சொன்னதொரு தினத்தில் தன் தாய், தந்தையுடன் கொழும்புக்கு வந்துசேர்ந்தாள் பாலகுமாரி. அவளுக்கே தெரியாமல் அவளது விருப்பத்துக்கு ஏற்றாற்போல நான் பல ஏற்பாடுகளை செய்திருந்தேன். அந்தச் சிறிய பெண்ணின் சந்தோசத்தில் நானொரு தாயாக நின்று சந்தோசப்பட்டேன். அவள் எனக்கு ஏற்கனவே தந்துவைத்திருந்த அவளது ஆரம்பகால கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை பிரசுரமான பத்திரிகை பிரதிகளை எடுத்துக்காட்டினேன். அவள் மிகவும் பூரித்துப்போனாள்.

இப்படியே இருக்க அவளுக்கு சிறுகதையிலும் ஆர்வம் இருப்பதை அவதானித்தேன். என்னிடமிருந்த பல சிறுகதைப் புத்தகங்களை அவள் முன் எடுத்துப்போட்டேன். வாசிப்பதில் அதிக நாட்டம் இருந்ததால் சலிக்காமல் அவள் அந்த சிறுகதை நூல்கள் யாவற்றையும் வாசித்தாள். வாசிக்கும் வேகத்தைப் பார்த்து நான் மிகவும் அதிர்ந்து போயிருக்கிறேன். காரணம் சராசரியாக யாரும் வேகமாக வாசித்தால் நினைவுத்திறனில் அது பதிவதில்லை. ஆனால் பாலகுமாரிக்கு ஞாபக சக்தியும் அதிகம். எதையும் பார்த்ததும் கற்றுக்கொள்வாள். அதனால் விமர்சனத்துறையிலும், சிறுவர் ஆக்கத்திலும் அவளுக்கு நிறைய வழிகாட்டி அதில் பலரது அறிமுகங்களையும் பெற்றுக்கொடுத்தேன். ஒரு சிறிய விண்மீனாக இருந்தவள் இன்று இலக்கியத் துறையில் பிரசாசித்துக்கொண்டிருக்கிறாள்.


நான் சிறிதாக செய்த வழிகாட்டலில் அவள் பெரிய வெற்றிப் படிகளை எட்டிப் பிடித்துவிட்டாள். இப்போதுகளில் எனது படைப்புக்களைப் பார்த்து விமர்சனங்கள் சொல்லி, அதில் குறைகள் இருந்தால் கண்டுபிடித்துக் கூறுவாள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டோம். எம்மைப் பார்த்து பொறாமைபட்ட சில கண்களும் இருந்தன. எமது பிரிவை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் இறைவனின் நாட்டத்தால் நமக்குள் போட்டியோ பொறாமையோ இல்லாததால் நாம் சாதனையை நிலைநாட்டலாம் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. என்றும் எப்போதும் மனங்கோணாமல் நாம் வாழ்வதற்கு வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்பதே எனது பேரவா!!!